Article by: Ms Rathai Muthu
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது இந்த நாளை சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

இந்த உலகில் பிறப்பெடுத்த மற்ற ஜீவராசிகளை விட மனித குலமே இந்த தினத்தை கொண்டாட வேண்டிய மூலகாரணத்தை உருவாக்கியுள்ளது. மனிதனின் பகுத்தறிவு ஆயிரமாயிரம் கண்டுபிடிப்புகள் பயன் அளித்தாலும். பல்லாயிரம் பக்க விளைவுகள் நம்மை தவிர அனைத்து உயிர்களையும் இயற்கையையும் சீரழித்தன. அப்பொழுது எல்லாம் அது தவறாக படவில்லை. மனிதனையும் பாதிக்கும் சூழல் உருவான பின் தான் சுற்றுச்சூழலின்அவசியம் உருவானது.
நவீன விஞ்ஞான, தொழில் நுட்ப ,கைத்தொழில் துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. ரசாயனக் கழிவுகள் ,புகை என்பன நீர் நிலைகள் மற்றும் வளிமண்டலம் போன்றவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது. சுற்றுச்சூழலை மனிதன் பாதுகாக்கவே கடமைப்பட்டவன். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது அனுபவிக்கத் தொடங்கிவிட்டது.
மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அவசியம் என்பதை இவ்வுலகில் பலரும் உணர்வதில்லை. மரங்கள் இல்லை எனில் இங்கு நாம் இல்லை இதனாலேயே சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் மரங்களின் முக்கியத்துவம் பற்றி மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள். தனது தேவைக்காக காடுகளை அழித்து விட்டால் அவ்விடம் பாலைவனம் தவிர வேறு ஏதும் இல்லை. மனிதகுல வளர்ச்சிக்காகவும் அடுத்த சந்ததிக்காகவும் காடுகளையும் இயற்கை வளங்களையும் மனிதன் திட்டமிட்டு காக்க வேண்டிய பொறுப்பு உடையவனாவான்.
மேலும் சுற்றுச்சூழல் தொடர்பாக காலநிலைமாற்றம், பூமி வெப்பமடைதல் ,ஓசோன் படலம் பாதிப்பு ,நன்னீர் வளம் ,சமுத்திரம், கடற்கரை பிரதேசங்கள்,காடழிப்பு ,உயிரியல்மாறுபாடு ,உயிரியல்தொழில்நுட்பம் ,சுகாதாரம் ,ரசாயன பாதுகாப்பு போன்றவற்றில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
உபயோகித்த பொருட்களை மறுபயனீடு செய்வதன் மூலமே சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். இந்த உலகில் பிறப்பெடுத்த அனைவரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய ஒன்றாக்க வேண்டும் என்பதில் நம் தலைமுறைக்கு இதனை தெளிவு படுத்த கடமைப்பட்டுள்ளோம்.
- கழிவு கட்டுப்படுத்தல்(reduce)
- மீள் உபயோகம்(reuse)
- திருத்தி பயன்படுத்தல்(repair)
- மீள் உருவாக்கம்(recycle)
- கழிவு அகற்றம்(remove)
நம் முன்னோர்களின் வழியில் நாமும் அடுத்த சந்ததியினருக்கு இயற்கையோடு வாழும் இன்பமான வாழ்வை வாழ வகை செய்வோம் என்று இந்த சுற்றுச்சூழல் தினத்தில் உறுதியேற்போம்.

