Category Archives: Uncategorized

உலக சுற்றுச்சூழல் தினம்

Article by: Ms Rathai Muthu

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது இந்த நாளை சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

        இந்த உலகில் பிறப்பெடுத்த மற்ற ஜீவராசிகளை விட மனித குலமே இந்த தினத்தை கொண்டாட வேண்டிய மூலகாரணத்தை உருவாக்கியுள்ளது.   மனிதனின் பகுத்தறிவு ஆயிரமாயிரம் கண்டுபிடிப்புகள் பயன் அளித்தாலும். பல்லாயிரம் பக்க விளைவுகள் நம்மை தவிர அனைத்து உயிர்களையும் இயற்கையையும் சீரழித்தன. அப்பொழுது எல்லாம் அது தவறாக படவில்லை. மனிதனையும் பாதிக்கும் சூழல் உருவான பின் தான் சுற்றுச்சூழலின்அவசியம் உருவானது.

            நவீன விஞ்ஞான, தொழில் நுட்ப ,கைத்தொழில் துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. ரசாயனக் கழிவுகள் ,புகை என்பன நீர் நிலைகள் மற்றும் வளிமண்டலம் போன்றவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது. சுற்றுச்சூழலை மனிதன் பாதுகாக்கவே கடமைப்பட்டவன். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது அனுபவிக்கத் தொடங்கிவிட்டது.

            மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அவசியம் என்பதை இவ்வுலகில் பலரும் உணர்வதில்லை. மரங்கள் இல்லை எனில் இங்கு நாம் இல்லை இதனாலேயே சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் மரங்களின் முக்கியத்துவம் பற்றி மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள். தனது தேவைக்காக காடுகளை அழித்து விட்டால் அவ்விடம் பாலைவனம் தவிர வேறு ஏதும் இல்லை. மனிதகுல வளர்ச்சிக்காகவும் அடுத்த சந்ததிக்காகவும் காடுகளையும் இயற்கை வளங்களையும் மனிதன் திட்டமிட்டு காக்க வேண்டிய பொறுப்பு உடையவனாவான்.

                மேலும் சுற்றுச்சூழல் தொடர்பாக காலநிலைமாற்றம், பூமி வெப்பமடைதல் ,ஓசோன் படலம் பாதிப்பு ,நன்னீர் வளம் ,சமுத்திரம், கடற்கரை பிரதேசங்கள்,காடழிப்பு ,உயிரியல்மாறுபாடு ,உயிரியல்தொழில்நுட்பம் ,சுகாதாரம் ,ரசாயன பாதுகாப்பு போன்றவற்றில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

                 உபயோகித்த பொருட்களை மறுபயனீடு செய்வதன் மூலமே சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். இந்த உலகில் பிறப்பெடுத்த அனைவரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய ஒன்றாக்க வேண்டும் என்பதில் நம் தலைமுறைக்கு இதனை தெளிவு படுத்த கடமைப்பட்டுள்ளோம்.

  • கழிவு கட்டுப்படுத்தல்(reduce)
  • மீள் உபயோகம்(reuse)
  • திருத்தி பயன்படுத்தல்(repair)
  • மீள் உருவாக்கம்(recycle)
  • கழிவு அகற்றம்(remove)

                நம் முன்னோர்களின் வழியில் நாமும் அடுத்த சந்ததியினருக்கு இயற்கையோடு வாழும் இன்பமான வாழ்வை வாழ வகை செய்வோம் என்று இந்த சுற்றுச்சூழல் தினத்தில் உறுதியேற்போம்.

தமிழன் ஆதிமுதல் சுற்றுச்சூழல் காவலன்

Article by : Ms. Rathai Muthu

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ இயற்கை; சான்றோர் வாக்கு.
நமது முன்னோர்கள் போகி கொண்டாடுவது என நம்மை பழக்கப் படுத்தியதற்கு முக்கிய காரணம் இயற்கைகையையும் அதன்சுற்றுச் சூழலையும் பேணி பாதுகாக்கவே என நாம் சிந்தித்தால் புரியும். பனிக்காலமான மார்கழி மாதம் முடியும் நாளான போகியன்று அருகில் அண்டியிருக்கும் பூச்சிகள், விஷக்கிருமிகள் போன்றவற்றை அழிப்பதற்காகத்தான். பழையதை எரிக்கும் சடங்கை நடைமுறைப்படுத்தினர் முன்னோர். அத்துடன், குளிர்காலத்தில் வியாதிகள் எளிதில் தொற்றிவிடும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக மூலிகைச்செடிகளை எரித்து அதில் வெளிவரும் புகையை சுவாசித்தனர். வேப்பிலைக் கொத்துக்களை வீட்டு வாசலில் கட்டினர்.

பழைய துணி மற்றும் சில வகையான பொருள்களை எரிப்பதற்கு அறிவியல் பின்புலத்துடன் கூடிய பாரம்பர்ய காரணங்கள் பல உண்டு.. நாப்கின் புழக்கத்தில் இல்லாத அன்றைய நாள்களில், மாதவிடாய் தருணத்தில் பெண்கள் அந்த நாள்களுக்கென பிரத்யேகமான துணியை, துவைத்து துவைத்துப் பயன்படுத்துவர். குழந்தைகளைத் தாலாட்டும் தொட்டில் முதல் அன்றாட பயன்பாடுகள் பலவற்றிலும் பெண்களின் ஆடைகளே அதிக புழக்கத்தில் இருந்தன. அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தினால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படும். ஆக, ஆரோக்கியத்தை மேம்படுத்தவே பழைய துணிகளைத் தீ வைத்து எரிக்கும் அந்த ஏற்பாடு. இதன்படி போகி அன்று பழைய ஆடைகளைக் கொளுத்திவிட்டு, தைத்திருநாளில் புதிய ஆடைகள் உடுத்தும் பழக்கம் உருவாக இதையும் முக்கியக் காரணமாக சொல்லலாம். ஆக, போகிப் பண்டிகை என்பது சுற்றுச்சூழலின் உயிர்ப்பினைக் கெடுக்கும் நாளாக மாறிப்போனது வருத்தமான விஷயமே. உணர்வுரீதியாக ஆரோக்கியத்துடன் கொண்டாடப்பட்ட நாள்கள் மறைந்து, விஷப்புகையை சுவாசிக்கும் ஒரு நாளாக போகிப் பண்டிகை மாறிப்போய் பல வருடங்கள் ஆகிவிட்டன.

புதிய போகி

தனக்காக வாழ்வதல்ல மனிதம்; அனைத்து உயிர்களுக்கும் மதிப்பளிப்பதுதான் மனிதம்என்பதைப் புரிந்துகொண்டு வாழ வேண்டும்.

தனி மனிதனாக நம்மால் இந்தப் பூவுலகுக்கு என்ன செய்யமுடியும் என்பதை யோசித்துச் செயல்படுவோம். போகிப் பண்டிகை என்றால் பிளாஸ்டிக் பொருள்களையும் நாம் உடுத்தும் உடைகளையும் தீயிட்டுக் கொளுத்தும் நாள் என்றும் ஒரு பழைய பிளாஸ்டிக் தட்டை மேளம் போல அடித்து சத்தம் எழுப்பும் நாள் என்றும் அடுத்த தலைமுறைக்கு சொல்லித் தராமல்,போகியின் உண்மையான மகத்துவங்களை சொல்லிக் கொடுப்போம். சுற்றுச்சூழலைச் சிதைக்காத வகையில் பாரம்பர்ய விழாவைக் கொண்டாடுவோம்.

இன்று நமக்கு தேவை இல்லாத பொருள் என்று எண்ணிய அனைத்தையும் எரித்து சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறோம். அதனை விடுத்து வீட்டினை சுத்தம் செய்து தேவையற்ற பொருள்களை தரம் பிரித்து நம்மால் மறுபயனீடு செய்யக்கூடிய பொருள்களை மீண்டும் உபயோகிக்கலாம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மற்ற பொருள்களை மட்டும் எரிக்கலாம். பயனுள்ள பொருள்களான பாடப்புத்தகங்கள், பழைய பொம்மைகள், உபயோகமான பழைய எலக்ட்ரிக் சாதனப்பொருட்கள் ஆகியவற்றை தேவைப்படுவோருக்கு வழங்கலாம்.

போகி விழா பழையதை போக்குவது மட்டுமல்லாமல் அதில் தேவை அற்றது என்பதையும் உபயோகமாக மாற்றுவது என்ற மாற்றத்தை மக்களிடையே வருவிக்க உறுதி ஏற்போம். எனவே, இனியாவது நமது முன்னோரின் மரபு சார்ந்த விஷயங்களுக்குச் சற்று செவி மடுப்போம். நம் மரபுக்கான காரணங்களை சிந்தித்து, ஆரோக்கியம் காக்கும் பண்டிகையாகப் போகியை மாற்றுவோம்.